Monday 25 March 2013

பாலியல் பலாத்காரம்



தினமும் காலையில் செய்தித் தாளைப் பிரித்தால், குறைந்தது 2,3  இடங்களிலாவது பாலியல் பலாத்காரம் என்று செய்தி இடம் பெறாமல் இருப்பதில்லை.

இந்த வார்த்தையைக் கேட்டாலோ, படித்தாலோ அடி வயிற்றிலிருந்து கோபம் பீரிட்டுக் கொண்டு வருகிறது.  இவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தானே!.  இவர்களுக்கும் அக்கா, தங்கை, மகள் எல்லோரும் இருப்பார்கள் தானே.   சமீபகாலமாக இந்தப் பொல்லாதவர்களின் பார்வை பிஞ்சுக் குழந்தைகளின் மேலும் பட ஆரம்பித்திருக்கிறது.   என்ன கொடுமை இது.

முன்பெல்லாம் ஒரு சின்ன பெண் குழந்தையைப் பார்த்தால், ஆஹா எவ்வளவு அழகாக இருக்கிறது என்றோ, எவ்வளவு அழகாக சிரிக்கிறது, குழந்தைக்கு சுத்திப் போடச் சொல்லணும் என்றெல்லாம் நினைப்பேன்.

ஆனால் இப்பல்லாம் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தால்,  வயிற்றிலிருந்து பந்து போல் ஒரு பீதியும், இறைவா இந்தக் குழந்தை நல்லபடி வளர்ந்து நல்லா இருக்கணுமேங்கற கவலையும்தான் மேலோங்குகிறது, அது எந்தக் குழந்தையா இருந்தாலும், யாரோட குழந்தையா இருந்தாலும்.  கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்காவது ஜாக்கிரதையாக இருக்க சொல்லிக் கொடுக்கலாம்.  ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருவது.

அதிலும் சில இடங்களில் சில ஆசிரியர்கள், சொல்ல வார்த்தையே இல்லை.  மாதா, பிதா, குரு, தெய்வம் என்று இவர்களை தெய்வத்தை விட உயர்ந்தவர்களாக சொல்லப்பட்டிருப்பது இவர்களுக்குத் தெரியாதா? சிறிய கிராமங்களில் குறைவான பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்பக்கூட பயப்படுகின்றனர்.

நண்பர் திரு T.N. MURALIDHARAN அவர்கள் மூங்கில் காற்றுஎன்ற வலைத் தளத்தில் பெண் குழந்தைகளை எப்படி பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க தயார் படுத்த வேண்டும் என்று அருமையாக சொல்லி இருக்கிறார்.

http://tnmurali.blogspot.com/2013/03/children-sexual-abuse-awareness.html

இந்தப் பதிவைப் படிப்பவர்கள் முடிந்தவரை மற்றவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!

   குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது,  பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல்  மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில்  குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது  வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப  நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில்  அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம்.

எங்கேயோ  எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது  என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல்   குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
  நம் சமூகத்தில் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும்  பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத  எண்ணங்களோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசங்களை அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். Good Touch எது  Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும். 

தொடுதலின் வகைகள்:
  1. பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக  உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
  2. பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
  3. தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு  சொல்ல வேண்டியது என்னென்ன? இதோ இந்தப் படங்களைப் பாருங்கள் 

                                                             தொடுதல் விதி 
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.

             கட்டியணைப்பது 

உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை  கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும் 

                                                                          பரிசு 
சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.


 
                     ரகசியம் 
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும் 



வேண்டாம்னு சொல்லணும்:தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும் 






சொல்லிவிடு
 உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு
                                 
                                                
  உன்மீது தவறு இல்லை
தொடுதல்  விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ  அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ  ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது  சொல்லலாம்.

 மேற்கூறிய அனைத்தையும்  குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது. 

 அரசுபள்ளிகளில்  படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே! 

இந்த  தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை அக்கறையுடன் எதிர்பார்க்கிறேன்.
  .

10 comments:

  1. ஜனவரி 20, 2011 ல் இது பற்றிய நான் எழுதிய பதிவு

    பெற்றோர்களின் கவனத்திற்கு : Child Sexual Abuse http://avargal-unmaigal.blogspot.com/2011/01/child-sexual-abuse.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக படிக்கிறேன். படித்து என் ப்ளாகில் மீண்டும் பதிகிறேன்.
      நன்றி.

      Delete
  2. //இப்பல்லாம் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தால், வயிற்றிலிருந்து பந்து போல் ஒரு பீதியும், இறைவா இந்தக் குழந்தை நல்லபடி வளர்ந்து நல்லா இருக்கணுமேங்கற கவலையும்தான் மேலோங்குகிறது, அது எந்தக் குழந்தையா இருந்தாலும், யாரோட குழந்தையா இருந்தாலும்.//

    ஆமாம். மிகவும் கவலைகொள்ளத்தான் வேண்டியுள்ளது. ;(

    ReplyDelete
  3. //நண்பர் திரு T.N. MURALIDHARAN அவர்கள் ’மூங்கில் காற்று’ என்ற வலைத் தளத்தில் பெண் குழந்தைகளை எப்படி பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க தயார் படுத்த வேண்டும் என்று அருமையாக சொல்லி இருக்கிறார்.//

    ஆம். நானும் படித்தேன். பயனுள்ள கட்டுரை தான். கருத்தளிக்கப்போகும் போதுமின் தடை ஏற்பட்டுவிட்ட்து.

    அவருக்கும் என் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. நண்பரின் பதிவை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    அவரின் பதிவை அன்றே பகிர்ந்து விட்டேன்...

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. எல்லா இடங்களிலும் இதே போல பிரச்சனை. தில்லியில் மிகவும் அதிகம். நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் பகீரென இருக்கிறது. எங்கே சென்று கொண்டிருக்கிறோம்! :(

    ReplyDelete
  6. பெண் குழந்தைகள்,நல்லபடி வளர்த்து,பெரியவர்களாகி ஒருத்தன் கையில் பிடித்து கொடுக்கும் வரை எவ்வளவு பொருப்பு என்று
    விசாரப்படுவார்கள். இப்போது இது பொதுஜன விசாரமாகி விட்டது.
    பதிவு நல்ல கருத்துள்ளதாக இருக்கிறது. எழுதியவருக்கும், உங்களுக்கும் பாராட்டுகள். அன்புடன்

    ReplyDelete
  7. உங்களது கவிதை இன்று என் பக்கத்தில்......

    http://venkatnagaraj.blogspot.com/2013/04/7.html

    உங்கள் தகவலுக்கு மட்டும்.

    நட்புடன்

    வெங்கட்
    புது தில்லி.

    ReplyDelete
  8. வணக்கம் தோழி!
    உங்கள் கவிதை வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பூவில் இன்று பகிரப்பட்டுள்ளது கண்டு இங்கு வந்தேன்.
    வித்தியாசமான சிந்தனை. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

    இங்கு பதிவில் நீங்கள் பகிர்ந்துள்ள விடயமும் விழிப்புணர்வினைத்தரும் நல்ல பதிவுதான். பகிர்வுக்கு வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  9. பெண்குழந்தைகள் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாகத்தான் மாறி வருகிறது.


    முரளிதரன் பதிவு படித்தேன் முன்பே.

    விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

    ReplyDelete