Sunday 30 December 2012

புத்தாண்டு பிறக்குது



புத்தாண்டு பிறக்குது
புத்தாண்டு பிறக்குது
முத்தான கோரிக்கைகள்
முன்னே வைக்கின்றேன்
முடிந்தால் நிறைவேற்றிடு
முழு முதற் கடவுளே – முடிந்தால்
முழுவதும் நிறைவேற்றிவிடு

மொழிச்சண்டை,
இனச்சண்டை,
மதச்சண்டை,
ஜாதிச்சண்டை,
அண்டை, அயல் நாட்டுச் சண்டை
எல்லா சண்டைகளையும்
அறவே ஒழித்திடு.

கொலை, களவு, கற்பழிப்பு,
நரபலி, தீண்டாமை,
நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்
நச்சென்று நசுக்கி
நலம் கெட்டுப்போகவை.

நீ கொடுத்த இன்னுயிரை
தானே அழிக்கும்
தரங்கெட்ட செயலை
தப்பாமல் மாற்றிடு.

பிறர் பொருள்,
பிறர் மனை கவரும்
பேராசையை
கட்டாயம் விரட்டி விடு.

பிச்சையில்லா பாரதம்
நிச்சயம் உருவாக்கிடு

உழைப்பின் உயர்வு,
உயிரின் விலை,
பாரம்பரியம்,
நல்ல பழக்க வழக்கங்கள்
புரியாதவர்களுக்குப்
புரிய வைத்திடு.

முட்டாள் மனிதனை
மூளைச் சலவை செய்தாவது
முடிந்தவரை நிறைவேற்றிடு.


Saturday 29 December 2012

இயற்கையின் நியதி




சாலையோரத்தில் ஒரு காகம்

எலியைத் துரத்தும் போதும்,

சுவற்றுப் பல்லி விட்டில் பூச்சியைப்

பிடித்து விழுங்கும் போதும்

தேசிய புவியியல் தொலைக்காட்சியில்

மானை புலி துரத்துவதையும்,

வரிக்குதிரையை சிங்கம் விரட்டிப்

பிடிப்பதையும்,

மலைப்பாம்பு முழுதாய் ஒரு ஆட்டைப்

பிடித்து விழுங்குவதையும்,

மீன்களைப் பறவைகள் கொத்திச்

செல்வதையும் பார்க்கும் போதும்,

கண்ணெதிரே ஓர் உயிர் அடங்கி

உடலை விட்டுப் பிரியும் போது, 

இது உணவு சுழற்சி

இதுதான் இயற்கையின் நியதி என்று

அறிவு ஏற்றுக் கொண்டாலும்,

உணர்வு ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே

மனம் பதை பதைக்கிறதே.


Friday 21 December 2012

மலர்ப்படுக்கை





வாழ்க்கை ஒன்றும்
முழு மலர்ப் படுக்கை அல்ல

முள் குத்தாமல்

பார்த்துக் கொள்வதும்

குத்தினால் பொறுத்துக்கொள்வதும்
நம் கையில் தான்

Monday 17 December 2012

மாயன் காலண்டராவது மச்சான் காலண்டராவது


மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது

22-12-2012 அன்று காலை
வழக்கம் போல்
அலாரம் அடித்த்தும்
அதன் தலையில் தட்டி
பத்து நிமிடம்
செல்லத்தூக்கம் போட்டு எழுந்து
                         
வாசல் தெளித்து
மார்கழி மாதம் என்பதால்
தம்மாத்தூண்டு கோலம் போடாமல்
கொஞ்சம் பெரிய கோலம் போட்டு

பரபரவென காபி போட்டு, சமைத்து,
ஆபீசுக்கு மணியாச்சு, மணியாச்சு
என்று பாட்டு பாடி

ரயில் நிலைய
படி ஏறி வரும் போதே
ஒரு ரயிலை விட்டு விட்டு,
நான் விட்ட ரயில்
காலியாகப் போச்சே என்று புலம்பி
அடுத்த ரயில் வர நேரமாக
ரயில்வேயைத் திட்டி

எக்மோரில் ஆள் சேர்த்து
ஆட்டோ பிடித்து
அலுவலகம் சென்று

‘ஹலோ, குட்மார்னிங்என்று
தொலைபேசியில் பதிலளித்து

நடுவில் வீட்டிலிருந்து,
வாரம் ஒரு நாள்
எதுலயாவது உப்பு போட மறந்துடுவயே,
இன்னிக்கு ரசத்துல உப்பு இல்ல,
என்று திட்டு வாங்கி

மாலை பழையபடி
ஆட்டோ, ரயில், ஆட்டோ
என்று வீடு வந்து சேர்ந்து

மீண்டும் சமையலறையில்
நுழைந்து வேலை முடித்து,
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு

நடுவில் என் ஸ்டேட்டஸுக்கு
யார், யார் லைக், கமெண்ட்
போட்டிருக்காங்கன்னு பார்த்து

நல்ல நண்பர்களின்
நல்ல கருத்துக்களுக்கு
லைக்கும், கமெண்டும் போட்டு

படுக்கப்போகும்போது
பேத்தி எங்கள் படுக்கையறையில்
வந்து கை, கால் உதறி விளையாடி,
ஆ, ஊ என்று பேசி, கண் உருட்டி,
விட்டத்தைப் பார்த்து               
வண்ணத் தொலைக்காட்சி
பார்ப்பது போல் ரசிப்பதை
ரசித்து

பனிரெண்டு மணிக்கு மேல்
மறுநாள் எழ அலாரம் வைத்துவிட்டு
தூங்கச் செல்வேன்.

மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது
யார் ஜம்பமும்
இங்கு பலிக்காது..

அன்னை நான் அழலாமா?


IN AND OUT CHENNAI DEC 16 - 31 இதழில் வெளிவந்த என் கவிதை.  இங்கு உங்களுக்காக மீண்டும் பதிந்துள்ளேன்.

ஏர் கொண்டு உழுதாய்
விதை விதைத்தாய்
களை எடுத்தாய்
கதிர் அறுத்தாய்
போரடித்தாய்
வலிபல பொறுத்தேன்
வையத்து மக்கள்
பசி பிணி போக்கத்தானே,
வாய் வாழ்த்தாவிட்டாலும்
வயிறு வாழ்த்துமே என்று
வாளாதிருந்தேன்.

என்னை வெட்டிக் குழைத்து
மண்பாண்டம் செய்தாய்
பாவம் பிழைக்கத்தானே என்று
பேசாதிருந்தேன்
சோறு சமைக்கத்தானே என்று
சோகத்தை மறைத்திருந்தேன்
அகல் விளக்காக்கி அகமகிழ்ந்தாய்
இருள் நீக்கி ஒளியேற்றத்தானே
என்று அமைதியாய் இருந்தேன்
பலப்பல கனிமங்களை உனக்கு
வாரி வழங்கி உன் வாழ்க்கையை
வளமாக்கினேன்.

ஏரிகளையும், நீர் நிலைகளை தூர்த்தும்
வயல்வெளிகளை அழித்தும்
மாட மாளிகைகளையும்,
கூட கோபுரங்களையும் கட்டி
என் மேல் பாரத்தை ஏற்றினாய்.
என்னை அழகாக்கி
நீயும் மகிழ்கிறாய் என்று
பகல் கனவு கண்டிருந்தேன்.


ஆனால்
என் தோல் சுருங்கும் அளவுக்கு,
என் முகம் வாடும் அளவுக்கு
என் மனம் நோகும் அளவுக்கு
என் உடல் நாறும் அளவுக்கு,
குப்பை, கூளங்களைப் போட்டு,
நீர் வளங்களை சாக்கடையாக்கி
என்னை நிரந்தர
நோயாளி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!
என் கண்ணீரை வற்றாத
ஜீவநதி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!

அன்னை நான் அழலாமா?
என்னை நீ அழ விடலாமா?

Tuesday 11 December 2012

முதல் பரிசு



என் எழுத்துக்குக் கிடைத்த முதல் பரிசு.

‘பண்புடன்’ ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் என் சிறுகதை ‘காவல்’ எனக்கு ”இரண்டாம் பரிசை”ப் பெற்றுக் கொடுத்துள்ளது.

https://groups.google.com/forum/?fromgroups#!topic/panbudan/GOQ1PbHjWbQ

உங்களுக்காக ‘காவல்’ சிறுகதையை மீண்டும் இங்கு பதிகிறேன். 

காவல்

     ஆச்சி, என் புள்ளையைப் பாத்தீங்களா ஆச்சி? பன்னண்டு மணிக்கு ஸ்கூல்விட்டா பன்னண்டேகாலுக்கு வீட்டுல இருப்பான். இப்ப மணி ஒண்ணரை ஆச்சு. இன்னும் வீட்டுக்கு வரலயே ஆச்சி

     நான் இங்கயேதாம்மா உக்காந்திருக்கேன்.  காலையில நீ புள்ளையை இஸ்கூலுக்கு கூட்டிப் போறப்போ பாத்தேன்.  புள்ளையை இப்ப பார்க்கலயே.  நீ பதறாதம்மா.  முதல்ல இஸ்கூலுக்குப் போய் பாருஎன்றாள் பெட்டிக்கடை ஆச்சி.

            “சரிங்க ஆச்சி” 

     இன்னிக்கு சனிக்கிழமை.  நாளைக்கு ஸ்கூல் வேற லீவு.  ஸ்கூல மூடறதுக்கு முன்னாடி போய் சேரணுமேஎன்று புலம்பிக் கொண்டே ஸ்கூல் இருக்கும் திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். 

பள்ளி வாட்ச்மேன் கேட்டைப் பூட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக ஓடினாள். “வாட்ச்மேன், கேட்டை பூட்டாதீங்க.  என் பையனைக் காணும்.  இன்னும் வீட்டுக்கு வரலஎன்று கத்திக்கொண்டே ஓடினாள்.

“எல்லா புள்ளைங்களும் வூட்டுக்குப் போயிட்டாங்களேம்மா

“இல்ல வாட்ச்மேன் தயவு செஞ்சு உள்ள போய் பாப்போம் வாங்க என்று சொல்லிக் கொண்டே கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள்.

“நான் தான் சொன்னேனே அம்மா.  பாருங்க ஸ்கூல்ல ஒரு ரூம்புலயும் ஒரு புள்ள கூட இல்ல. வீட்டுக்குப் போய் புள்ள வந்துட்டானான்னு பாருங்க.  நானும் அக்கம்பக்கத்துல தேடறேன்.  கவலைப் படாம போங்கம்மா.  கண்டிப்பா பையன் கிடைச்சுடுவாம்மா”.

மறுபடியும் வீட்டிற்கு வந்து பையன் வராததைக் கண்டு பதறி, பயந்து கணவனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

“எல்லா இடத்துலயும் தேடிப் பாத்தியா?”

“பாத்துட்டேங்க.  ஸ்கூலுக்குப் போய் அங்கயும் பாத்துட்டேங்க.  எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. ஏற்கனவே ஒண்ணை பறி கொடுத்துட்டோம்“சரி, நீ கவலைப் படாத நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு வரேன்.   நம்ம பையன் பத்திரமா இருப்பான்”.  மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டானே தவிர அவனுக்கு கையும் ஓடவில்லை,  காலும் ஓடவில்லை.  மனம் திக், திக்கென்று அடித்துக்கொண்டது.
* * *

     என் செல்போன் அடிக்குது அதை எடு”.

     என்ன ஏட்டு, என்ன விஷயம்.

     சார் ஒரு மிஸ்ஸிங் கேஸ். ஒரு சின்ன பையனை, எட்டு வயசு இருக்குமாம், காணுமாம் சார்”.

     “சரி நான் இதோ கிளம்பி வரேன்.

     ஏங்க சாப்பாடு

     வந்து சாப்பிடறேன்.  ஒரு எட்டு வயசு பையன காணுமாம்

     ஐயய்யோ!. இந்தாங்க இந்த மோரை குடிச்சுட்டு கிளம்புங்க.

     நான் வரணும்ன்னு காத்திருக்காம, தயவு செஞ்சு நீ சாப்பிட்டுடு

     சரிங்க”.
* * *
     நீங்க மார்க்கெட்ல அரிசிக் கடை வெச்சிருக்கீங்க இல்ல.  உங்க பையனதான் காணுமா?  உங்க பெயர் என்ன? கொஞ்சம் விவரமா சொல்லுங்க சார்.  உங்களுக்கு யாராவது விரோதிங்க இருக்காங்களா?

     அப்படியெல்லாம் யாருமே கிடையாது சார்

     பையனை திட்டினீங்களா? அடிச்சீங்களா?

    
அப்படி எல்லாம் வழக்கமே இல்லீங்க சார்”.

     பையனோட போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா?

இல்ல சார்.  நான் கடையில இருந்து நேர வரேன். வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரேன் சார்.

“ஏட்டு, சாரோட போன் நம்பரை வாங்கிக்கிட்டீங்களா?

     இருக்கு சார்

     சரி நீங்க தைரியமா வீட்டுக்குப் போங்க சார், நல்லதே நடக்கும் கவலைப் படாதீங்க.  
* * *
     வாங்க ஏட்டு. நாமளும் போய் தேடுவோம்

     சரி சார். சின்ன ஊர்தான சார்.  ஈசியா கண்டு பிடிச்சுடலாம் சார்

     ஏன் ஏட்டு, அரிசிக் கடைக்காரர் வசதியானவரா?  யாராவது குழந்தையை கடத்தி பணம் கிணம் பறிக்கப் பாக்கறாங்களா? சமீபத்துல இங்க அந்த மாதிரி எதுவும் நடக்கல.  ஏன் ஏட்டு, நீங்க இந்த ஸ்டேஷன்ல ரொம்ப வருஷமா இருக்கீங்க இல்ல.  நம்ப ஏரியாவுல அந்த மாதிரி ஏதாவது குழந்தையை கடத்தி இருக்காங்களா?

     சார் அந்த மாதிரி எல்லாம் எதுவும் எனக்குத் தெரிஞ்சு நடந்ததே இல்ல சார்

     அப்ப உங்களுக்குத் தெரியாம எதாவது நடந்திருக்குமா?

     என்ன சார், ஒரு பேச்சுக்குச் சொன்னா..

     பாவம்யா அந்த ஆள். முகமே சரியில்ல.  கடவுளே அந்த குழந்தை கிடைக்கணும்என்று வாய் விட்டு இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு ஏட்டு “இந்த இன்ஸ்பெக்டர் தேடிக் கண்டு பிடிக்கறதை விட்டுட்டு கடவுள் கிட்ட மனு போடறாரேஎன்று நினைத்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்.

     வணக்கம் சார், வணக்கம் சார்

     என்ன மேஸ்திரி, என்ன இன்னிக்கு வேலை நடக்கலியா?

     இல்ல ஏட்டு சார், காலேல சித்தாள் ஒருத்தன் செத்து போய்ட்டான் சார். அதான் லீவு விட்டுட்டேன்.

     ஓ. சரி மேஸ்திரி.  அரிசி கடைக்காரர் பையனைக் காணுமாம்.  அதான் தேடிக்கிட்டு போறோம். வாங்க சார் நாம   போகலாம்”.

* * *
     என்ன ஏட்டு, நாமளும் எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்துட்டோம்.   இப்ப அவர் வந்தா என்ன பதில் சொல்றது,   சரி, போன் அடிக்குது, என்னன்னு போய்ப் பாருங்க”.

     சார், சார், மேஸ்திரி போன்ல பேசறார் சார்.  அந்த பாதி கட்டின கட்டிடத்துக்கு பின்னாடி ஒரு குழந்தை தூங்கிக்கிட்டிருக்காம்.  வாங்க சார் போய் பார்க்கலாம்

     மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்த பையன், இன்ஸ்பெக்டர், ஏட்டு, மேஸ்திரி மூவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தான். “

            “சார், சார் எனக்கு தெரியும் சார்.  நான் பாத்துருக்கேன் சார்.  இது நாம தேடற பையன் தான் சார்.

     அருகில் சென்று அந்தப் பையனைத் தூக்கிக் கொண்டு, “என்ன கண்ணா, ஏன் இங்க வந்து இப்படி தூங்கிட்டிருந்தஎன்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

     அதுவா அது வந்து, அங்கிள் அங்க பாருங்க.  என்னோட பையைப் போட்டு மூடி வெச்சிருக்கேன்

     என்ன ஏட்டு, பையன் சம்பந்தமில்லாம பேசறான்.  எதைக் கண்ணு மூடி வெச்சிருக்க?

     அது, வந்து, முன்னாடி தங்கச்சி பாப்பா விழுந்து செத்துப் போச்சு இல்ல.  அப்பறம் போன வாரம் டீவில கூட காமிச்சாங்களே.  HAPPY BIRTHDAY அன்னிக்கு ஒரு பாப்பா விழுந்து செத்துப் போச்சே. அதான் வேற எந்தப் பாப்பாவும் அப்டி விழுந்து செத்துப் போகக் கூடாதுன்னு. என்னோட பைய போட்டு மூடி வெச்சுட்டு இங்கயே உக்காந்துட்டிருந்தேன்.  அம்மா குடுத்த பிஸ்கெட்ட எல்லாம் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன்”.

     சே, ஒரு சின்ன குழந்தைக்கு இருக்கற பொறுப்பு கூட பெரியவங்க நமக்கு இல்ல.  யோவ் மேஸ்திரி, கேட்டியாய்யா? என்னய்யா இது. டீவில காட்டறான், பேப்பர்ல போடறான். எவ்வளவு சொன்னலும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?  ஏதோ உன் நல்ல நேரம்.  எந்த அசம்பாவிதமும் நடக்கல.  இந்த மாதிரி இனிமே நடந்தா நீ கம்பிதான் எண்ண வேண்டி இருக்கும்.  ஜாக்கிரதை

     சார், சார், இனிமே கவனமா இருக்கேன் சார். மன்னிச்சுடுங்க சார்”.

     என் பையன் கிடைச்சுட்டானா?  சார் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்”.

     கடவுளோட அருள்.  அவருக்கு நன்றி சொல்லுங்க.  ஒரு குழந்தையோட அருமை என்னை மாதிரி குழந்தையே இல்லாத ஆளுக்குதான் சார் தெரியும். எனக்கும் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சு.

     நீங்க ஏற்கனவே ஒரு குழந்தையை பறிகொடுத்துட்டீங்க போல இருக்கு.  ஜாக்கிரதை சார்”.

     அங்கிள், டாட்டா அங்கிள்”.

     “டாட்டா கண்ணு”.