Saturday 20 July 2013

பிஞ்சு நெஞ்சில் நஞ்சு

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகையில் வெளி வந்திருந்த கதைகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.

ஏற்கனவே ஊடகங்கள் முழு மூச்சுடன் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.   இது போன்ற கதைகள் குழந்தைகளுக்குத் தேவையா?

படித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.






ஏமாற்றுப் பணம்


ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு சாமியார், தரையில் துண்டை விரித்து, சில சீட்டுகளைப் பரப்பினார்.  கூட்டம் கூடி வர, ‘பக்தர்களே...உங்களுக்கு மாபெரும் நற்செய்தி!  இதோ என்னிடம் பாவமன்னிப்பு சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன.  ஒரு சீட்டு நூறு ரூபாய்!  நீங்கள் இதுவரை எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், இதைக் கொண்டு போனால்..நிச்சயம் சொர்க்கத்தில் இடம் உண்டு.  இதுதான் அதற்கான நுழைவுச் சீட்டு! என்று கூவினார்.  எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு சீட்டை வாங்க, பணம் குவிய, சாமியாருக்கு ஒரே குஷி.
     அடுத்தபடியாக, ‘என்னிடத்தில் இன்னொரு சீட்டும் உள்ளது.  நீங்கள் இனி செய்யப் போகும் பாவத்தையும் மன்னிக்கக் கூடிய அந்த சீட்டின் விலை இருநூறு ரூபாய்என்று சொல்லி அதையும் விற்று பணத்தை அள்ளினார் சாமியார்.
     சாமியார் புறப்பட எத்தனித்த சமயத்தில் வந்து சேர்ந்த ஒருவன், இரண்டு சீட்டுகளையும் வாங்கிய கையோடு, கத்தியைக் காட்டி மிரட்டி,மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.  அப்போது, ‘உனக்கு நரகம்தான்என்று சாமியார் சாபம் விட, ‘நான் தான் இருநூறு ரூபாய் சீட்டையும் வாங்கிட்டேனே.  உன் சாபம் பலிக்காது!என்றபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தான்.
குறுக்கு வழியில பணம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார்களோ?

*****

அநியாய வட்டி அழிவைத் தரும்!

     ஓர் ஊரில், ஒரு பேராசைக் கிழவி இருந்தாள்.  அவள் எப்போதுமே அநியாய வட்டிக்குத்தான் கடன் கொடுப்பாள்.  பக்கத்து ஊர்க்காரர் இருவருக்கு பணநெருக்கடி வரவே, கிழவியைத் தேடி வந்தார்கள்.  “நூறு ரூபாய்க்கு, மாசம் 20 ரூபா வட்டி, முதல் மாத வட்டியை எடுத்துக்கிட்டு தான் பணம் தருவேன்என்று கறாராக சொன்னாள் கிழவி.
     இவ்ளோ வட்டியா... இது அநியாயம்... எனக்கு கடனே வேண்டாமென்று!ஒருவன் விலகி நிற்க, அடுத்தவனோ, எதையும் யோசிக்காமல் கடனை வாங்கிக் கொண்டான்.
     வெளியில் வந்த்தும், :ஏண்டா இப்படி அநியாய வட்டிக்கு கடன் வாங்கினே? இப்போ பாரு... உனக்கு இருபது ரூபா நஷ்டம்!என்று ஒருவன் சொல்ல...
     அட போப்பா! எனக்கு இருபது ரூபாதான் நஷ்டம் ... அந்த கிழவிக்கு எண்பது ரூபா நஷ்டம்.  நான் அசலை திருப்பிக் கொடுத்தாதானே!என்றான் மற்றவன்.

 ஏமாற்றுவது எப்படி என்று சொல்லித் தருகிறார்களோ?

*****

பிசினாரித்தனம் கூடாது!.

     ஒரு கஞ்சன் வீட்டுக்கு, இன்னொரு கஞ்சன் விருந்துக்குப் போனான்.  விருந்தில் ரசம் ஊற்ற, அதை சாப்பிட்டுவிட்டு செம சூப்பர்!என்றான்.  வீட்டுக்கார கஞ்சன் சொன்னான், “எங்க பலசரக்குக் கடையில் மிளகை அள்ளி அள்ளி வியாபாரம் செஞ்ச பிறகு, கையை கழுவுன தண்ணியில செய்த ரசம்தான் இது... அதான் இவ்வளவு ருசியா இருக்கு!என்று.  இதைக் கேட்டவுடன் விருந்துக்கு வந்த கஞ்சன் டென்ஷனாகி, “அடப்பாவிங்களா! இப்படி மிளகுத் தன்ணிய யாராவது முழுவதும் வீண் செய்வாங்களா? ஒரேயடியா ஒரே நாளில் இப்படி கையை கழுவுனதுக்கு பதிலாக, ஒரு நாளைக்கு ஒரு விரல் வீதமாக, அஞ்சு நாளைக்கு ரசம் வெச்சுருக்கலாமேஎன்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.
     சிக்கனம், கஞ்சத்தனம், பிசினாரித்தனம் ஆகிய மூன்றுமே வேறு வேறு!
சிக்கனம் சீர்மை தரும்... கஞ்சத்தனம் சீரழிவைத்தரும்... பிசினாரித்தனம் பிசாசையே கூட்டி வருமாம்.!

 என்ன ஒரு தத்துவம்


*****

குலப் பெருமை!
ஓர் ஊரில், ஒரு புளுகுமூட்டை இருந்தான்.  அவனுடைய தொழிலே எதற்கெடுத்தாலும் புளுகுவதுதான்.  இதைப் பெருமையாக வேற நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான்.  ஆனால், இதற்கு நேர் எதிரான குணங்களோடு... ரொம்ப சாதுவாக, பயந்த சுபாவத்துடன் வளர்ந்தான் அவனுடைய 12 வயது மகன்.  இது, அப்பன்காரனை ரொம்பவே வெசனப்பட வைத்த்து, “ஐயோ, புளுகத் தெரியாக இப்படித் தறுதலையா திரியுறானே! நம்ம் குடும்பத்துப் பெருமையைக் கெடுத்துடுவான் போலிருக்கே! என்று சொல்லி, மகனை அடிக்கவும் செய்தான்.
அப்பா அடித்து விட்டாரே...என்கிற கவலையிலும், யோசனையிலும் மகன் மூழ்கிக் கிடக்க, அவனைப் பார்க்க அப்பன்காரனுக்கு பாவமாகிவிட்ட்து.  பையனை குஷிப்படுத்துவதற்காக, தன் தோள் மீது அவனை உட்கார வைத்துக் கொண்டு, அடுத்த ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றான்.
வழியில் ஆறு குறுக்கிட, தண்ணீரில் இறங்கி அதைக் கடக்க ஆரம்பித்தான்.  அப்போது, தண்ணீரிலிருந்து ‘டப்என்றொரு சத்தம்.
‘என்னடா சத்தம்?
ஒண்ணுமில்லேப்பா!தண்ணியில ‘டப்னு கைய விட்டேன்.  மீன் மாட்டிக்கிச்சு.  அதை அப்படியே பொரிச்சுத் தின்னுட்டேன்!.

மகன் இப்படி சொன்னதைக் கேட்ட்தும்... “ஆகா நம்ம குலப்பெருமை அழியாதுடா மகனே!என்று சந்தோஷத்தில் ஆட்டம் போட்டான் அப்பன்.
 பிள்ளை புளுகவில்லை என்று வருத்தப்படும் அப்பா.
ரொம்ப அருமை.


*
***
*****
***
*

7 comments:

  1. நிஜம்தான்
    நானும் இந்தக் கதைகளைப் படித்து
    மிகவும் மனம் நொந்துப்போனேன்
    மிகச் சாமர்த்தியமாக புத்திசாலித்தனத்தை
    நல்லதனத்தில் இருந்து பிரிக்கும்
    பித்தலாட்ட முயற்சி இது
    வில்லத்தனத்தை கதாநாயக அந்தஸ்த்துக்கு
    முதலில் கொண்டு வருகையில் சாதாரணமாகத்தான் பட்டது
    அது சமூகத்தை எவ்வளவு தூரம் கெடுத்துவிட்டது
    என்பது இப்போது டி வி சீரியல்களைப் பார்த்தால் புரியும்
    சமூக அக்கறையுடன் கூடிய அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகையில் வெளி வந்திருந்த கதைகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.

    ஏற்கனவே ஊடகங்கள் முழு மூச்சுடன் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற கதைகள் குழந்தைகளுக்குத் தேவையா?//

    குழந்தைகளுக்கான பத்திரிகையில், அதுவும் பிரப்ல பத்திரிகைகளில் இது போன்ற க்தைகளைக்கொடுக்கவே கூடாது. மிகவும் கண்டிக்கத்தக்கது தான்.

    நல்ல நீதிக்கதைகளை மட்டுமே குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். நல்ல புத்தகங்களை மட்டுமே குழ்ந்தைகளைப் படிக்கச்செய்ய வேண்டும். டி.வி. + பத்திரிகை போன்றவற்றிற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும்.



    ReplyDelete
  3. சோமசன்மா என்பவர் வடமொழியில் பஞ்சதந்திரக்கதைகளை எழுதியுள்ளார். அதை பி.எஸ். ஆச்சார்யா என்பவர் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளார். அந்த தமிழாக்கக்கதை புத்தகத்தை வாங்கிப் படித்து, ஆராய்ந்து வருகிறேன். எல்லாக் கதைகளிலும் சூது வாது ஏமாற்று பொய் என நிறைந்துள்ளன. இருப்பினும் மறுபக்கம் நிறைய வாழ்வியல் நீதிகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

    எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் ஆங்காங்கே சிறுசிறு கதைகள் கதைக்குள் கதைகள் என எழுதப்பட்டு போய்க்கொண்டே உள்ளது, சுவாரஸ்யமாக உள்ளது.

    குழந்தைகள் படித்து அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என நாம் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்பதே, உண்மை.

    ReplyDelete
  4. தொலைக்காட்சி தொடர், விளம்பரம் உட்பட இவை போன்ற கதைகள் கண்டிப்பாக குழந்தைகளை கெடுக்கத்தான் செய்யும்... இவைகளை எழுதியவர்களின் பெற்றோர்கள் அவ்வாறு சொல்லித் தந்திருக்கலாமோ...? இல்லை என்றால் பணம் அல்லது புகழ் ஒன்றே நோக்கமோ...? கொடுமை... தடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கும் உள்ளது... நன்றி...

    ReplyDelete
  5. ஏற்கெனவே பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விழிக்கும் இளைய சமுதாயத்திற்கு இது போன்ற தொரு வழிகாட்டுதல்கள் எங்கே கொண்டு போய் விடப் போகிறதோ

    ReplyDelete
  6. எத்தனையோ நல்ல கதைகள் நம்மிடத்தில் இருக்கும்போது, புதிதாக முயற்சிக்கிறேன் என்ற பெயரில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்.... இதைப் படிக்கும் குழந்தைகளின் நிலை...... :(

    ReplyDelete
  7. ஏமாற்றுபவனை ஏமாற்ற்வேண்டும் என்று சொல்லித் தரும் நீதிக் கதைகள் சமுதாயத்தை கெடுக்கக் கூடியவை. அவற்றை சாமர்த்தியம் என்று குழந்தைகள் நினைக்கக் கூடும் . உங்கள் கூற்று சரியானதே!

    ReplyDelete